அடுக்குமாடிக் குடியிருப்பின் வெளியே
நேற்றிருந்த ஒரு மரத்தைக் காணவில்லை.
பதினோராவது மாடியில் அதன் தலையும்
இரண்டாவது மாடியில் அதன் உடலும்
காணாமல் போயிருந்தன.
மரம் அகன்றது
மற்ற வெற்றிடங்கள்போல் இல்லை.
நேற்றென்பதே காணாதது போல்
நிழல்கள் வந்தமரும் உரையாடல்களை
வெற்றிடம் சூழ்ந்திருந்தது.
திடீர் வெளிச்சத்தில் திடுக்கிட்டு
குறுகி ஒளிந்துகொண்டன அறைகள்.
தாமதமாய்ச் சுதாரித்த காலம்
இல்லாத நேற்றின் கிளையினை வளைத்து
அவசரமாய் நிலத்தின் மடியில்
நாளையின் கனியொன்றை ஒளித்து வைத்தது.
Comments
Post a Comment